கோடையின் தொடக்கமான மார்ச் முதல் ஜுலை வரையில் கொள்ளை நோய்களின் தாக்கம் மிக தீவிரமாகவே இருக்கும்.
இதில் PPR (Rinder pest) அடைப்பான் நோய் மற்றும் ஆட்டுஅம்மை போன்றவைகளுக்கு தடுப்பூசிகள் கட்டாயம் தந்தாக வேண்டும்.
ஏனெனில் இவற்றின் தாக்கத்திலிருந்து ஆடுகளை மீட்டு கொண்டு வருவது மிகச்சவாலான காரியம் மற்றும்
பண்ணைகளில் பெரும் உயிரிழப்பையும், பண்ணையாளருக்கு பெரும் நட்டத்தையும் ஏற்படுத்தும்.
PPR (அடைப்பான்) அறிகுறிகள் :
# தீவனம் எடுக்காத மந்தநிலை.
# 102F மேல் உடல்வெப்பநிலை.
# சளி, தாரையாக மூக்கிலிருந்து கொட்டுதல்.
# செருமல் மற்றும் தீவிரமான இருமல்.
# தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற அதிதீவிரமான கழிச்சல்.
# வாயின் உட்புறங்களில் சிவந்த புண்கள்.
# வாயிலிருந்து மெல்லிய கம்பி போன்ற உமிழ்நீர் சுரந்து கொண்டு இருத்தல்.
# மூச்சு விடுவதில் சிரமம்.
மேற்கண்ட அறிகுறிகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து காய்ச்சல், சளி, கழிச்சல், வாய்ப்புண் என மொத்த உடல்நிலையும் பாதிக்கப்பட்டு சுவாசம் தடைபட்டு மற்றும் தீவிர கழிச்சலினால் உடலின் நீர்சத்து முழுவதுமாய் குறைந்து, வாயின் கொப்புளங்களால் தீனி எடுக்க முடியாத நிலையில் சென்று, ஆடுகள் உயிரிழந்து விடும்.
நோய்தாக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்தில் உயிரிழப்பு ஏற்படும்.
பண்ணைகளில் முதலில் நோய் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆடுகளில் இந்நோய் படிப்படியாக தீவிரமாகி, மற்ற ஆடுகளுக்கு பரவும் போது, அதி வேகமாகவும், தீவிரமாகவும் நோயின் காரணிகளை உண்டுபண்ணி, அடுத்தடுத்து உயிரிழப்புகள் வேகமாக இருக்கும்.
ஆட்டு அம்மை :(Goat and sheep pox)
அறிகுறிகள் :
# உடல்வெப்பநிலை அதிகரித்து காணப்படுதல் (காய்ச்சல்)
# கொப்புளங்கள்.
அம்மை கட்டிகள் ஆட்டின் உடலில் வால், ஆசனவாயின் வெளிப்புறம், மடிகாம்புகள், விதைப்பை ஆகிய இடங்களில் செந்நிற சிறு சிறு புள்ளிகளாய் ஆரம்பிக்கும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து உடல் முழுவதும் சிவந்த திட்டுகள் உருவாகும். பின் நோயின் தீவிரம் அதிகமாகும் போது கண் இமை, காதுகள், உதடுகள், மடிகாம்புகளில் கொத்து கொத்தாக கொப்புளங்கள் உருவாகும்.
வாயில் கொப்புளங்கள் உருவாகுவதால் தீவனம் எடுக்காத நிலை தொடரும்.
காய்ச்சலை ஆண்டிபயாடிக் மருந்துகளால் குறைத்தாலும், அம்மை கொப்புளங்கள் ஆற மாதங்கள் பிடிக்கும்.
PPR தீவிரமாக இருக்கும் காலங்கள் ஏப்ரல் முதல் மே வரை.
தடுப்பூசி மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் போடுவது நல்லது.
அம்மை நோய் தீவிரமாக ஜுன் முதல் ஆகஸ்டு வரை.
தடுப்பூசியை மே மாத தொடக்கத்தில் போடுதல் நலம்.
ஆடு வளர்ப்போர் இவ்வவிரண்டு நோய்க்கான தடுப்பூசிகளை இரண்டு நாட்களுக்கு முன்னர் குடற்புழு நீக்கம் செய்து விட்டு போட வேண்டும்.
பருவத்தில் தவறாது அந்தந்த தடுப்பூசிகளை அளித்து நம் ஆடுளை உயிரிழப்பிலிருந்து காத்து நம் பொருளாதார இழப்பு, நேரவிரயம், அதிகப்படியான மனஉளைச்சல் ஆகியவற்றை எதிர்கொள்ளாமல் ஆடு வளர்ப்பை திறம்பட வழிநடத்தலாம்.