தேவையான பொருட்கள்
1. Grow Bags அல்லது Thotti.
2. அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.
3. விதைகள்
4. நீர் தெளிக்க பூவாளி தெளிப்பான்
5. பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்
தொட்டிகள்
தொட்டிகளில் மண் போடும்போது அதனுடன் சம அளவு இயற்கையாக மட்கும் குப்பைகள் சேர்க்க வேண்டும்.
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டும் தொட்டியை நிரப்பலாம். இந்த கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும்.
இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
ஆரோக்கியமான மற்றும் நோய் தாக்காத விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது கொடி வகை என்பதால் 5 விதைகள் வரை ஊன்றலாம். வளர்ந்த செடிகளில் ஏதாவது வளர்ச்சி குறைந்து காணப்பட்டால் அந்தச் செடியை மட்டும் நீக்கி விட வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.
பந்தல் முறை
மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.
உரங்கள்
வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம். இவ்வகையான உரங்களை பயன்படுத்தினால் அதற்கு மேல் வேறு உரங்கள் தேவைப்படாது.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.
பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும்.
அறுவடை
இது 2 முதல் 3 மாதம் வரை பயன் தரும். காய்களை முற்றி விடாமல் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்.
0 comments:
Post a Comment